இன்று துருக்கியில் நடக்கும் கலகங்கள் உலகலாவிய ரீதியில் வெவ்வேறு வகையான பார்வைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதோ எர்டகானின் ஆட்சி கவிழப்போகிறது என்று ஒரு சாராரும், மறுபக்கம் எர்டகான் தலைமையில் மீண்டும் இஸ்லாமிய கிலாபத்து உருவாகப்போகிறது என்று சிலருமாக விவாதங்கள் சூடாக நடைபெற, ஏன் இந்த கலகங்கள் என்ற குழப்ப நிலையில் பலருக்குமான கேள்வியாக துருக்கி மாறியிருக்கிறது.கடைசி கிலாபத்தின் (உஸ்மானிய கிலாபத்து) தலைமையகமாக அல்லது மையபுள்ளியாக துருக்கி இருந்ததாலும் முஸ்லிம்களே துருக்கியின் பொரும்பான்மை என்பதாலும் உலக முஸ்லிம்களின் பலர் இன்னும் துருக்கியை ஒரு இஸ்லாமிய குடியரசாகவே நினைக்கிறார்கள். ஆனால் 1920 பின்னால் உருவாக்கப்பட்ட " நவீன"துருக்கி என்பது இஸ்லாத்தின் அடையாளங்களை அழித்து அதன்மேல் கட்டப்பட்ட ஒரு மதற்சார்பற்ற ஒரு குடியரசு என்பது பலருக்கு புதிய விடயமாக இருக்கலாம்.
யாரால் இந்த "நவீன" துருக்கி உருவாக்கப்பட்டது??
முதலாம் உலக மகா யுத்தத்தில் உஸ்மானிய படைசார்பாக போரிட்ட ஒரு இராணுவ அதிகாரியான முஸ்தபா கமால் எனப்படும் அதாதுர்க் (துருக்கியின் தந்தை) இனால்தான் இன்றைய துருக்கி உருவாக்கப்பட்டது.
அதாதுர்க்கின் எழுச்சி
முதலாம் உலகபோரில் ஜேர்மனிக்கு ஆதரவாக உஸ்மானிய கலீபா போரிட எடுத்த தன்னிச்சையான முடிவு மிகப்பிழையானதாக மாறியது. போரின் முடிவில் ஜேர்மனி தோல்வியுற்றது ஒருபுறம் இருக்க, அதன் சகாவான துருக்கி மூன்று முனையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. தெற்கை பிரித்தானியப்படையும், கிழக்கை ரஸ்யாவும், மேற்கை கிரேக்கமும் ஆக்கிரமிக்க தொடங்கின. துருக்கியின் மத்தியில் இருந்த அனதோலியா மலைக்குன்றுகள் மாத்திரம் துருக்கியின் வசமிருந்தது. இந்த அனதோலியாவில் இருந்து போரிட்ட படைக்கு தளபதியாக இருந்த முஸ்தபா கமாலின் வீரர்கள் இஸ்தான்பூல் நகரை நோக்கி முன்னேரிய பிரித்தானிய படையினரை தோற்கடித்ததும், இவரை துருக்கிய மக்கள் ஒரு தேசிய வீரராக கொண்டாடத்தொடங்கினார்கள். 1920 இல் துருக்கிய விடுதலை போரின் முடிவின்பின் அதாவது ஆக்கிரமிப்பு இராணுவங்கள் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர், கமால் தனது சுயரூபத்தை காட்ட தொடங்கினார். பல இன, மத மற்றும் மொழி பேசும் உஸ்மானிய கிலாபத்துக்கு மாற்றீடாக துருக்கிய அடையாளத்தை மட்டும் கொண்ட துருக்கிய தேசியவாத மதசார்பற்ற குடியரசை உருவாக்கவேண்டும் என்பதே இவரின் கனவாக இருந்தது.
இவரின் கனவிற்கு துருக்கியின் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர்பும், இஸ்லாமிய மார்க்கமும் தடையாக இருக்கின்றது என புழுங்கத்தொடங்கினார். தனது தேசியவாத மதசார்பற்ற சிந்தனைக்கு சார்பான இராணுவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு 1922 இல் துருக்கிய குடியரசை (Republic of Turkey) உருவாக்கினார்.
இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகள்
கிலாபத்திற்கு சார்பானவர்களால் என்னேரமும் தனது ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்ற நினைப்பில், இஸ்லாமிய நிறுவனங்களுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தார். இஸ்லாமிய அரசியலுக்கு எதிராக என்று ஆரம்பித்த இவரின் நடவடிக்கைகள், கல்வி மாற்றத்திலிருந்து ஆரம்பித்தது. இஸ்லாமிய கல்வி நிறுவனங்களை இழுத்து மூடியதுடன் மட்டுமல்லாது, இஸ்லாம் என்ற பாடத்தையே பாடசாலை கல்விமுறையில் இருந்து நீக்கினார். இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் முற்றிகையிடப்பட்டு அரசுடமையாக்கப்பட்டது. இஸ்லாமிய நீதிமன்றங்கள் சீல் வக்கப்பட்டன. நீதிபதிகள் கைதுசெய்யப்பட்டார்கள்.
இஸ்லாமிய அரசியல் நிறுவனங்களுடன் மாத்திரம் நின்றுவிடாது, தனிமனித சுதந்திரத்திலும் கைவைக்கத்தொடங்கினார். துருக்கி தொப்பி அணிவது ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டு மேலைத்தேய தொப்பி (Hat) அணிவதற்கு ஊக்குவிக்கப்பட்டது. அரச அலுவலகங்களில் ஹிஜாப் அணிவது முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்டது. இஸ்லாமிய கலன்டர் முறை இல்லாமல் செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை விடுமுறை நாள், மாற்றியமைக்கப்பட்டு சனி - ஞாயிறு வாரவிடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. அப்போதும் அவருக்கு இஸ்லாத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி அடங்கவில்லை. அரபியரின் மார்க்கம் (இஸ்லாம்) துருக்கியின் அடையாளத்திற்கு சவாலானது என்று ஒருமுறை பகிரங்கமாகவே கூறினார்.
மொழிச்சீர்திருத்தம்
துருக்கியின் இஸ்லாமிய வரலாறு அப்பாசியர்களின் காலத்தில் (கி.பி 900)இருந்து ஆரம்பிக்கின்றது. பல நூற்றாண்டுகாலமாக துருக்கியிற்கும் அரபு உலகத்துக்குமாக சமய மற்றும் வர்த்தக தொடர்பாடலினால், பல துருக்கியர்கள் அரபு மொழியில் பாண்டித்தியம் பொற்றிருந்தார்கள். இதனால் பல அரபு மொழியினாலான நூல்கள் துருக்கியிலிருந்து வெளியாகின. இது தனது மதற்சார்பற்ற அல்லது இஸ்லாத்துக்கு எதிரான தனது கொள்கைக்கு ஆப்பு வைக்கலாம் என்றும் , தனது கொள்கையான துருக்கிய மக்களை இஸ்லாத்தில் இருந்து தூரமாக்குவது கடினம் என உணர்ந்த கமால், துருக்கிய மக்களுக்கும் இஸ்லாத்திற்குமான இணைப்புபாலமான அரபு மொழியினை அடியோடு அழிக்க நினைத்தார். உலகம் முழுக்க ஒலிக்கும் அரபு மொழியிலான அதான் பலவந்தமாக நிறுத்தப்பட்டு, பதிலீடாக துருக்கிய மொழியில் அதான் கூறுமாறு வற்புறுத்தப்பட்டது. மீறுவோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். (இவரின் மரணத்தின் பின்னர் அதான் அரபு மொழிக்கு மாறியது குறிப்பிடத்தக்கது). அரபு மொழி எழுத்துருக்கள் இல்லாமல் செய்யப்பட்டு லதீன் மொழியில் எழுதும் முறை புகுத்தப்பட்டது. இதனால்தான் இன்றும் துருக்கிய பெயர்கள்கூட அரபு மொழியில் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருப்பதை அவதானிக்கலாம்.
இவரின் இந்த மாற்றியமைப்புக்கள் மேல்தட்டு (Kemalist elites எனப்படுவோர்) மற்றும் இராணுவ குடும்பங்களின் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இவர்கள் மார்க்கத்தை விட்டும் தூரமானார்கள். இவர்கள் சிறுபான்மையாக இருந்த போதும், துரதிஷ்ட வசமாக இவர்களின் சந்ததிகளே தொடர்ந்தும் ஆளும்வர்க்கமாக அல்லது ஆட்சியை தீர்மானிக்கும் பொறுப்பில் (இராணுவ மற்றும் நீதித்துறை) இருந்தார்கள். இடையிடையே இஸ்லாமியவாதிகள் தேர்தல் மூலம் ஆட்சியை பிடித்தபோதும், அதாதுர்க்கின் மதற்சார்பற்ற கொள்கைக்கு எதிராகவர்கள் என்ற அற்ப காரணத்தை காட்டி இராணுவம் அவர்களின் ஆட்சியை கவிழ்ப்பதும் வாடிக்கையாகியது.
ஏர்டகான்
இன்றைய துருக்கிய பிரதமர் தய்யிப் எர்டகான். இவரின் கட்சியானது(நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி - AKP) இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்தின் அடிப்படையிலான கொள்கைகளை பின்பற்றுகின்றது என்பதற்காக ஆரம்பத்தில் தடை செய்யப்பட்டு, எர்டகான் இராணுவத்தினரால் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் சூழ்ச்சிகளில் வெற்றிகொண்டு கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் இவருக்கு துருக்கியின் மத்தியதர மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் ஆதரவு பலமாக உண்டு. துருக்கியின் பொருளாதாரத்தை 10 வருடங்களுக்குள் 3 மடங்காக உயர்த்தி இவர் மேலும்பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். கடந்த 10 வருடங்களில் துருக்கியின் பலம்மிக்க தலைவராக மாறிய இவரின் ஆட்சியை அசைக்க முடியாத அதாதுர்க்கின் ஆதரவாளர்களே புரட்சி என்கின்ற பெயரில் கலகத்தில் ஈடுபடுகின்றார்கள்.
கலகத்திற்கு காரணம்தான் என்ன?? மது சம்பந்தமான சில ஒழுங்குகளை கொண்டுவந்தது, அதாவது இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை பார்களை மூட வேண்டும், வணக்கஸ்தலங்களுக்கும், பாடசாலைகளுக்கும் 100 மீற்றருக்கு அப்பால் பார்கள் இருக்க வேண்டும், மது சம்பந்தமான விளம்பரங்களுக்கு தடை, மற்றும் கேசி பார்க் எனும் இடத்தில் அங்காடி ஒன்றும் உஸ்மானிய கிலாபத்தின் போர்வீரர்களை நினைவுபடுத்தும் நினைவுத்தூபி ஒன்றையும் அமைப்பதுதான் இந்த கமாலிஸ்டுகளுக்கு பொறுக்கவில்லை. இவர்களையெல்லாம் "புரட்சியாளர்கள்" என்று புகழ்பாடுவோமா இல்லை குடிகாரக்கூட்டம்னு சொல்வோமா??