Thursday, October 31, 2013

சிரியா யார் வலையில் (பாகம் 03)


சிரிய யுத்தத்தில் ஆரம்பத்தில் இருந்தே பல வகையான மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன. யுத்தத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களும் மிக மோசமான மனித உரிமை மீறல்களையும் மனித குலத்துக்கு எதிரான போரியல் குற்றங்களையும் புரிந்திருக்கிறார்கள். சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் வெளிப்படையாக மீறப்பட்ட சம்பவங்கள் பல நூறுகளைகளையும் தாண்டியுள்ளது. இதில் முக்கியமானது அப்பாவிகளை மீதான இரசாயன தாக்குதல்கள். பல இடங்களில் இரசாயன தாக்குதல்கள் இடம்பெற்றதாக அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டாலும் ஆகஸ்ட் 21 தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் ஆயிரக்கணக்கில் தூங்கிய நிலையில்  இறந்து கிடந்தமை உலகத்தையே ஒரு கணம் உசுப்பிவிட்டது. இந்த தாக்குதல்களின் சூத்திரதாரிகளை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் உலகின் நாலபாகங்களில் இருந்தும் ஒலிக்கத்தொடங்கியது.  

சூத்திரதாரிகள் யாராயிருக்கலாம் என்பதற்கு நான்கு சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. அவற்றை பார்ப்போம்
1.       அசாத் அரசாங்கம்- சிரிய இராணுவத்திடம் இரசாயன ஆயுதங்கள் இருக்கின்றன என்பது ஒன்றும் இரகசியமான விடயம் இல்லை. சிரியா அரசு தன்னிடம் இரசாயன ஆயுதங்கள் இருக்கவில்லை என்று வெளிப்படையாக மறுத்ததும் இல்லை மறுக்கவும் முடியாது. மேலும் இரசாயன ஆயுதத்தை சாதாரண ஆயுதங்கள் போல நினைத்தவுடன் எல்லோராலும் கையாளவும்முடியாது. அதற்கு சிறப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் உட்பட அதற்குரிய கருவிகள் அவசியம். இதற்குரிய ஆற்றல் சிரிய இராணுவத்திடம் நிச்சியமாக இருக்கின்றது. அதனால் சிரிய இராணுவம் இந்த தாக்குதல்களை செய்திருப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.  எனினும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஐ.நாவின் இரசாயன பரிசோதகர்கள் டமாஸ்கஸ் நகரில் இருக்கும் போதே இந்த தாக்குதல் நடந்துள்ளமை அசாத் அரசு தவிர்ந்த வேற யாராவது செய்திருக்ககூடும்  என்ற சந்தேகத்திற்கு அடிப்படையாக அமைகின்றது. ஏனெனில் ஐ.நாவின் பரிசோதகர்கள் டமாஸ்கஸ் நகரில் நிற்கும்போது அதுவும் டமாஸ்கஸுக்கு மிக அருகாமையிலேயே தாக்குதல் நடத்தும் அளவுக்கு அசாத் முட்டாளாக இருக்க முடியாது. அப்படி என்றால் வேறு யார் செய்திருக்ககூடும்?
2.       அசாத் சிரிய ஜனாதிபதியாக இருந்தாலும் போர் ஆரம்பித்த பின்னர் அவர் எந்தளவு சிரியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பது சந்தேகமாகவே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக அவரின் இராணுவத்தின் முக்கிய பிரிவுகள் அவரின் சகோதரர் மாகிர் அசாத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. இவர் பசர் அல் அசாத்தை விட கடும்போக்காளர். யுத்தம் மூலமாக போராளிகளை முற்றாக ஒழிக்கலாம் என்று பிடிவாதமாக இருப்பவர். நான் ஏற்கனவே எனது முன்னைய பதிவில் சொன்னதை போல FSA யுடன் சமாதான போச்சுவர்த்தைகளுக்கான சில சமிக்ஜைகள் இருந்ததும் அசாத்தின் சில நெகிழ்வு போக்குகளும் மாகிர் அசாத்துக்கு பிடிக்கவில்லை. ஜனாதிபதி அசாத்துக்கு பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை வழங்காமல் இருப்பதற்காக ஏனைய கடும்போக்காளர்களுடன் சேர்ந்து இவ்வாறான ஒரு தாக்குதலை இவர் செய்திருக்ககூடும்.   
3.       போராளிக்குழுக்கள் – இராணுவ சமநிலை அசாத்துக்கு சார்பாக மாறிகொண்டிருக்கும் நிலையில் சர்வதேச தாக்குதல்முனை ஒன்றை திறப்பதன் மூலமாக களச்சமநிலையில் மாற்றம் ஒன்றை அவசரமாக ஏற்படுத்துவதற்காக இவர்கள் செய்திருக்ககூடும் என்ற கருத்தும் இருக்கின்றது.
4.       வெளிநாட்டு உளவு அமைப்புக்கள்- சிரியாவின் வெவ்வேறு பகுதிகளின் கட்டுபாடுகளும் பலரின் கைகளில் இருக்கும் நிலையில் பல வெளிநாட்டு உளவு அமைப்புக்களின் பிரசன்னங்களுக்கும் பஞ்சம் இல்லை. இதில் முக்கியமாக இஸ்ரேலின் மொசாட் உளவாளிகள் சிரியாவில் பெருமளவில் நிற்பதாக நம்பப்படுகிறது. ஏனெனில் இதுவரை சிரியா நிலப்பரப்பு மொசாட்டுக்கு தடை வலயமாகவே இருந்தது. தற்போது சிரியா  ஒரு திறந்தவெளி சந்தையாக இருப்பதால் அங்குள்ள உட்கட்டுமானங்கள் உட்பட பல தகவல்களுக்காக அவர்கள் பல முகங்களோடு சிரியாவில் நடுமாடும் நிலையில் சர்வதேச தாக்குதல் முனை ஒன்றை திறப்பதற்கான சர்வதேச அபிப்பிராயத்தை  (global opinion) கட்டியெழுப்புவதற்காக அவர்களே இந்த தாக்குதலை செய்திருக்கக்கூடிய சாத்தியங்களும் இல்லாமலிலை.

இந்த கோழைத்தனமான தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யாராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மற்று கருத்துக்கு இடமில்லை.

இதற்கு மேலதிகமாக தற்போது நடைபெற்று வரும் ஒரு தொடர் நிகழ்வை இங்கே சொல்லியே ஆகவேண்டும். அதாவது FSA தவிர்ந்த ஏனைய 14  போராளிக்குழுக்கள் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய இராணுவம் (Islamic Army) என்ற அமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இவர்களின் நோக்கம் இஸ்லாமிய கிலாபத்தை தோற்றுவிப்பது என்று பொதுவாக குறிப்பிட்டாலும் அரசியல் ரீதியாக அதனை எவ்வாறு அடையப்போகிறார்கள் என்பது தற்போதைய நிலையில் தெளிவில்லாமல் இருக்கின்றது.

இவர்களின் அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், மறுமுனையில் அரசியல் ரீதியாக சிரியா பிரச்சினைக்கு முற்றிப்புள்ளி வைக்கும் சர்வதேச முனைப்புகளும் ஆரம்பித்து இருக்கின்றன. இந்த நவம்பர் மாதத்தில் ஜெனிவாவில் சமாதான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.  அசாத் அரசு பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொண்டாலும், SNC இன்னும் உடன்படவில்லை போல தெரிகின்றது. அசாத் ஆட்சியில் இருக்கும்வரை பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்போவதில்லை என்பது அவர்கள் வாதமாக இருக்கிறது. சிரிய இராணுவத்தை தோற்கடிக்கும் வலு FSAயிடமிருந்து குறைந்து வரும் நிலையில் இவர்களின் அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும்,    சவுதி அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே இவர்கள் பின்னடிக்கிறார்கள் என்பதுவே சர்வதேச அவதானிகளின் கருத்து. அதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் சவூதி அரசாங்கம் தனக்கு முதன் முதலாக கிடைத்த ஐ.நா வின் பாதுகாப்பு சபைக்கான சுழற்றிமுறையிலான  பதவியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற குண்டை தூக்கி போட்டதை குறிப்பிடலாம். இந்த பதவி தற்செயலாக கிடைத்த ஒன்றல்ல. மூன்று வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். அன்றுதொட்டு தமது அதிகாரிகளுக்கு மொழிப்பயிற்சி உட்பட இராஜதந்திர பயிற்சிகள் அனைத்தையும் வழங்கி தயார் நிலையில் இருந்த சவூதி அரசாங்கம், திடீரென பின்வாங்கியமைக்கு முக்கிய காரணம் சிரியாவில் விடயத்தில் தான் முற்றுமுழுதாக நம்பிய அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து சர்வதேச தாக்குதல்களை தள்ளிப்போட்டதும், தற்போது அசாத்தை அகற்றாமல் நழுவல் போக்கை கடைபிடிப்பதே காரணமாகும். பேச வேண்டிய மேடையை (ஐ.நா பாதுகாப்பு சபை) உதறித்தள்ளிவிட்டு தனி ஒரு வல்லரசை மட்டும் நம்பும் சவூதியின் தீர்மானமானது முட்டாள்தனம் என்றால் அது மிகையாகாது. (தேவையேற்பட்டால் இதனை பற்றி வேறு ஒருபதிவில் விரிவாக பார்ப்போம்).

இந்த பேச்சுவார்த்தையில் யுத்த நிறுத்தம் என்ற பெயரில் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் வேலையை திரைமறைவில் வல்லரசுகள் ஆரம்பித்திருப்பதை போல தெரிகிறது. அதுதான் சிரியாவை இரண்டு நாடுகளாக துண்டாடும் வேலைத்திட்டம்.

வலை விரியும் .....

முன்னைய பதிவுகள் 

சிரியா யார் வலையில் (பாகம் 02)
சிரியா யார் வலையில் (பாகம் 01)


Monday, October 21, 2013

சிரியா யார் வலையில் ? (பாகம் 02)

ஆரம்ப ஆர்ப்பாட்டங்களில் சாதாரண பொதுமக்களே கலந்துகொண்டனர். இவர்களுக்கு ஆயுதம் ஏந்துவேண்டிய தேவை இருக்கவில்லை. ஏனெனில் இவர்களின் கோரிக்கை ஒன்றே, அது ஜனநாயக ரீதியான அரசாங்கம்இவர்களின் கோரிக்கையை சற்றும் பரிசீலனை செய்ய தயாரில்லாத அசாத்இராணுவத்தாங்கிகள் மூலமாகவும் போர் விமானங்கள் மூலமாகவும்  அவர்களுக்கு பதில் அளித்தமை இராணுவத்துக்குள்ளும் அரசுக்குள்ளும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதை எதிர்த்து இராணுவத்தில் இருந்த பெரும்பாலான சுன்னி இராணுவ அதிகாரிகள், வீரர்கள்  இராணுவத்தை விட்டும் தமது ஆயுதங்கள் சகிதம் வெளியேறத்தொடங்கினார்கள். இவர்கள் Free Syrian Army (FSA) என்ற ஆசாத்தின் இராணுவத்துக்கு எதிரான ஆயுத அமைப்பை உருவாகினார்கள். ஆரம்பத்தில் FSA யிடம் சிறிய ரக ஆயுதங்களே இருந்தபோதும் சில காவலரன்கள், முகாம்களை தாக்கி அதன்மூலம் பெறப்பட்ட   ஆயுதங்களே இராணுவத்துக்கு எதிராக ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டன. முன்னாள் இராணுவ வீரர்களுடன் உள்ளூர் இளைஞர்களும் இணையத்தொடங்கினார்கள்.

மறுபுறம் அரசாங்கத்தை விட்டு வெளியேரிய முக்கிய அமைச்சர்கள், உயர் அதிகார்களும் சிரிய தேசிய பேரவை Syrian National Council (SNC)  என்ற அரசியல் அமைப்பை (Political Organization) உருவாகினார்கள்எனினும் இந்த  அரசியல்இராணுவ கட்டமைப்புக்கள் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கவில்லை. இவர்களுக்குள் யார் தலைமைபொறுப்பை ஏற்பது, எவ்வாறு கூட்டிணைவது என்பது தொடர்பில் பாரிய கருத்துவேறுபாடுகள் இருந்தது. எனினும் ஒருவாராக கடந்த டிசம்பரில் (2012) இரு தரப்பினரும் இணைந்து National Coalition for Syrian Revolutionary and Opposition Forces என்ற அமைப்பை உருவாகினார்கள்எனினும் இந்த அமைப்பு எந்தளவுக்கு தற்போதைய புரட்சியில் தமது செல்வாக்கை வைத்திருக்கின்றது என்பது தற்போது  பெரும்கேள்விக்குறியாக இருக்கின்றது.

அதற்குரிய முக்கிய காரணம், ஆயுத மோதலின் வெற்றி தோல்வியே புரட்சியின் முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக  இருக்கும் நிலையில், FSA இன் இராணுவ பலத்தை மிஞ்சும் அளவுக்கு , இராணுவ மேலாதிக்கம் செலுத்திவரும் அல் கைதா போராளிகள். இதில் முக்கிய அமைப்பு ஜப்ஹத்- அல்- நுஸ்ரா எனும் அமைப்பாகும். இவர்கள் ஈராக்கில் தொடந்து இயங்கிவரும் Islamic State of Iraq and Levant/Sham (ISIS) எனும் அல்-கைதா அமைப்பின் கிளையாக செயல்படுவதாக அறியப்பட்டாலும் இரு அமைப்புக்களும் இருவேறு அமைப்புக்கள் என்பதே உண்மையாகும்.  அல்-நுஸ்ரா மற்றும் ISIS அமைப்பில் பெரும்பாலும் வெளிநாட்டு போராளிகள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகின்றதுஇதிலும் ISIS யில்தான் பெரும்பாலான வெளிநாட்டு போராளிகள் இருக்கிறார்கள். இவர்களில் பெருபாலானோர் வளைகுடா நாடுகளை சார்ந்தவர்கள், இவர்களுக்கு  மேலதிகமாக செச்னியா, பாகிஸ்தான், ஆப்கான் மற்றும் சில ஐரோப்பிய/அமெரிக்கர்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் நுஸ்ரா மற்றும் ISIS போராளிகள் இல்லாமல் அசாத்துக்கு எதிரான முக்கிய வெற்றிகள் பெறமுடியாது என்ற நிலைமையே இன்று காணப்படுகிறது. இவர்கள் ஆரம்பத்தில் FSA யுடன் இணைந்து அசாத்துக்கு எதிராக போரிட்டாலும், பின்னர் FSA இற்குள் மேலோங்கிய SNC யின் கொள்கை பிரச்சினைகள்கள் காரணமாக தனித்து இயங்குவது மாத்திரமின்றி FSA யிற்கும் நுஸ்ராவுக்கும் இடையிலேயே அயுத மோதல்கள் ஏற்பட்டு FSA யின் இராணுவத்தளபதி கமால் ஹமீமியை போட்டுத்தள்ளும்  அளவுக்கு பிரிவினை முற்றியிருக்கிறது. இது ஒருவகையில் அசாதுக்கு சாதகமாக மாறி இருக்கின்றது. போராளிகள் பெரும்பாலும் கெரில்லா போர் உத்தியையே கையாள்வதால், அசாத்தும் லெபனானின் ஹிஸ்புள்ளாவின் நேரடி உதவியை சிலவேளைகளிலும், அசாத்தின் நிழல் இராணுவமாக இயங்கும் சாபிஹா என்ற முற்றுமுழுவதும் அலவி பிரிவிரை கொண்ட துணை இராணுவத்தையும் களத்தில் இறக்கியுள்ளார். அல்-நுஸ்ரா மற்றும் ISIS யிற்கு மேலதிகமாக ௨௦ இற்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் களத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவற்றில் அஹ்றார்-அல்-ஷாம், புர்கான், சிரிய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் போன்றவை பெயர் சொல்லகூடியவையாகும். இதற்கு மேலதிகமாக சிரியாவின் வடக்கில் குர்திஸ்தான் போராளி அமைப்புக்கள் சில அசாத் அரசாங்கத்திற்கு எதிராகவும் சில குழுக்கள் அவருக்கு சார்பாகவும் போராடுகிறார்கள்.     

நாம் விளங்கவேண்டிய சிக்கலான விடயம் இதுதான்.  

இந்த சிரிய உள்நாட்டு போர் அசாத்தின் அரசாங்கத்திற்கும் FSA என்ற போராளிக்குழுவுக்குமிடையாக இருந்தாலும், களநிலவரங்களை சரியாக புரிந்து கொள்வது அவசியமாகிறது.

 FSA இன் நோக்கம் அசாத் இல்லாத சிரியாவின் ஜனநாயக அரசு. இதனை அடைவதற்கு அசாத்தின் இராணுவம் தோற்கடிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்குரிய வலு FSA யிடம் இல்லை. ஆனால் அதனை அடைவதற்குரிய ஓரளவு பலம் அல்-நுஸ்ரா மற்றும் ISIS யிடம்தான் இருக்கிறது.  அசாத்துக்கு எதிரான தாக்குதல்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாகவும் பொது எதிரியாக அசாத் இருந்தாலும்,  FSA யும்  அல்-நுஸ்ரா மற்றும் ISIS தற்போது ஒரு அணியில் இல்லை. அல் கைதாவின் கெரில்லா போரியல் முறையை எதிர்ப்பதற்கு சாபிஹாவும் சில சந்தர்ப்பங்களில் கெரில்லா போரியலில் பல அனுபவங்களை கொண்ட ஹிஸ்புள்ளாவும் களம் இறக்கப்பட்டுள்ளது.

FSA தற்போதைய நிலையில் அசாத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை கைப்பற்றுவது என்பதை விட தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை தக்கவைத்துக்கொள்வதற்காகவே சண்டையிட வேண்டியிருக்கிறது. ஒரு புறம் அசாத்தின் இராணுவம், மறுபுறம் அல் நுஸ்ரா போன்ற சகபோராளிக்குழுக்கள் ,இன்னொரு புறம் ஹிஸ்புல்லா போன்ற  எதிரிப்போராளிக்குழுக்கள் என்று மும்முனைகளில் போராடவேண்டிய நிலையில் FSA இருக்கிறது.  இதற்கு சிறந்த உதாரணம் சமீபத்தில் லெபனானிய எல்லையிலுள்ள குசைர் என்ற நகரத்தின் கட்டுப்பாட்டை இழந்ததை குறிப்பிடலாம். இதில் அரம்பத்தில் FSA இன் கை ஓங்கியிருந்த போதும், களத்தில் ஹிஸ்புல்லாவின் திடீர் பிரவேசம்   வெற்றி தோல்வியை தீர்மானித்தது. இதற்கு மேலதிகமாக தற்போதைய சிரியாவின் ஒவ்வொரு நகரமும் அல்லது நகரின் தனிப்பட்ட பகுதிகள் வேறுபட்ட குழுக்களின் கட்டுபாட்டில் இருக்கிறது. உதாரணமாக மிகப்பெரிய நகரான அலேப்போவின் மத்திய நகரம் இராணுவ கட்டுபாட்டில் இருக்கும்  அதேவேளை ஒவ்வொரு புறநகர் பகுதியும் வெவ்வேறு போராளிகளி குழுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    (சிரியாவின் தற்போதைய கட்டுப்பாட்டு நிலவரத்தை காட்டும் படம்) 


இவ்வாறான இக்கட்டான நிலையில் FSA இன் முன் சில தெரிவுகளே இருக்கின்றன. ஒன்று இறுதிவரை தனித்து போராடி இராணுவத்தை வெற்றி கொள்வது. அது தற்போதைய நிலையில் சாத்தியபடாத ஒன்றாகும். அடுத்தது சக போராளிக்குழுக்களுடன் இணைந்து போராடுவது. கொள்கை பிரச்சினைகள் பெரியளவில் மேலோங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அதற்கான வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது. அடுத்த தெரிவு அசாத் அரசுடன் சமரசர பேச்சுவார்த்தை.

தி கார்டியன் பத்திரிகை சமீபத்தில் ஒரு செய்தியை கசிய விட்டிருந்தது, FSA இன் இரண்டு முக்கிய அதிகாரிகள் கடந்த ஒகஸ்ட் மாதம் நடுப்பகுதியளவில் அசாத் அரசுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு டமாஸ்கஸ் நகருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர் என்ற செய்தியாகும். இந்த செய்தி தற்போதுதான் கசிந்திருக்கின்றது. இதன் உண்மைத்தன்மை எவ்வாறு இருந்தபோதிலும் இதன் பின்னணியில் மற்றொரு சம்பவம் தொடர்பு படுகிறது. அது ஒகஸ்ட் 21 இல் டமாஸ்கஸ் நகருக்கு அருகாமையில் நடந்த கோழைத்தனமான இரசாயன குண்டுவிச்சு தாக்குதலாகும். 

வலை விரியும் ..

Friday, October 11, 2013

சிரியா - யார் வலையில் ? (பாகம் 01)

உண்மையில் சிரியாவில் நடப்பது என்ன? இந்த போரின் உண்மை நோக்கம் என்ன ? யாருக்காக இந்த பேரழிவுதரும் போர் தொடர்கிறது??

இந்த கேள்விகள் எம் மத்தியில் எழுந்தாலும், இதற்குரிய சரியான விடையளிப்பது ஒன்றும் இலகுவான காரியமல்லை. ஏனெனில் சிரியாவில் நடக்கும் போருக்கு பல பரிமாணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பரிமாணத்துக்கும் வெவ்வேறு விடைகள் இருக்கின்றன. அதைப்போல ஒவ்வொரு பரிமாணத்துக்குள்ளும் அதன் பிரதிபலனை அனுபவிப்பதற்கும் வெவ்வேறு பங்குதாரர்கள் இருக்கின்றார்கள்.

அசாத்துக்கும் அவருக்கு எதிரான போராளிகளுக்கும் இடையிலான மோதல் என்று ஒற்றை வரியில் சிரிய யுத்தத்தை சொல்லிக்கொண்டாலும், ஒவ்வொருவருக்கும் சார்பான - எதிரான என்றபாரிய பரிமாத்தையும் அதன் பங்குதார்களையும் இந்த கட்டுரை நடுநிலையாக நின்று பார்க்கவிளைகிறது

அரபு வசந்தம் தூனிசியாவில் ஆரம்பித்து எகிப்து லிபியா என்று பல்வேறு அரபு நாடுகளை பலதசாப்த காலமாக தமது சர்வாதிகார பிடியில் வைத்திருந்த ஆட்சியாளர்களை மிகவும் குருகிய காலத்தில் தூக்கி எறிய ஆரம்பித்தவேளை, சிரிய மக்களும் அசாத் குடும்பத்தின் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணியது வாஸ்தவம்தான். ஆனால் தூனிசியா, எகிப்து மற்றும் லிபியாவில் புரட்சி ஏற்பட்டு ஆட்சியார்கள் மக்களால் துரத்தியடிக்கப்பட்டதும் மத்திய கிழக்கின்  ஏனைய ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டனர். என்ன விலைகொடுத்தேனும், எந்த பேயுடன் சேர்ந்தாவது தமது ஆட்சியை பாதுகாப்பது என்பதில் உறுதிபூண்டனர். நான்கு தசாப்தகால குடும்ப ஆட்சியை வைத்திருக்கும் அசாத்தும் அதற்கு விதிவிலக்கல்ல. புரட்சி ஏற்பட்டால் எவ்வாறு தன்னைபாதுகாக்கவேண்டும் என்பதை முடிவெடுக்க‌  இவருக்கு ஓரளவு கால அவகாசம் இருந்தது. ஏனெனில் எகிப்தில் முபாரக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு மூன்று மாதங்களின் பின்பே சிரியாவில் மக்கள் வீதிக்கு வரத்தொடங்கினர்.

சிரிய புரட்சியின் ஆரம்பத்தில் இன மத வேறுபாடுகள் இன்றே ஆரம்பிக்கபட்டது. ஆர்ப்பாட்டங்களில் சுன்னிகள், சியாக்கள், குர்திஸ் இனத்தவர் மற்றும் கிரிஸ்தவ மக்கள் என எல்லோரும் கலந்துகொண்டனர். அவர்களின் ஒரே கோஷம் அசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுற்று, ஜனநாயக தேர்தல் மூலமான அரசாங்கம் வேண்டும் என்பதேசிரியா மக்கள் தமது புரட்சியை ஆரம்பித்தவுடன்தனது திட்டப்படி அதை முலையிலேயே கிள்ள நினைத்த அசாத் , தனது முழு இராணுவப்பலத்தையும் ஆயுதமில்லா அப்பாவிகள் மீது பிரயோகித்தார். ஆட்சி மாற்றம் கோரிய மக்கள் வயது, பால் வித்தியாசம் இன்றி கொல்லப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டனர்.

அசாத் குடும்பம் அலவிகள் என்ற சியா பிரிவினராகும். இவர்கள் சுன்னி முஸ்லிம்களை பெரும்பான்மையாக (60%) கொண்ட சிரியாவின் மக்கள்தொகையில் 12% வீதமாகும்டெரா என்ற நகரத்திலேயே ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்தாலும், ஹோம் மற்றும் ஹாமா என்ற சுன்னிகள் பெரும்பான்மையாகவுள்ளநகரங்களே புரட்சியின் மையப்புள்ளியாக இருந்தது. ஹாமா என்ற நகரம் அசாத் குடும்பத்திற்கு ஒரு கருப்பு புள்ளியாகும். இந்த நகரத்தை சார்ந்த மக்களும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பும் ஹபிஸ் அல்-அசாதுக்கு (தற்போதைய அதிபரின் தந்தை) எதிரான புரட்சியை  1982 அம் ஆண்டு ஆரம்பித்தபோது, சிரிய இராணுவம் முழு நகரையே தரைமட்டமாக்கி ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிரை பறித்தெடுத்த வடு இன்னும் அந்த மக்களிடம் இருந்து ஆறவில்லை. இதை ஹாமா படுகொலை (Hama Massacre) என்று இன்றும் நினைவுகூறுவர்.  

தற்போதைய புரட்சிக்கு வருவோம், இந்த டெரா, ஹோம் மற்றும் ஹாமா நகரங்களை  சுற்றி வளைத்த அசாத்தின் இராணுவம் ஈவு இரக்கமின்றி அப்பாவிகளை வேட்டையாடத்தொடங்கியது. மறுபுறம், அரபு புரட்சியின் தூதுவன் என்றழைக்கப்பட்ட சமூக ஊடங்களான பேஸ்புக், ட்விட்டர் உட்பட பெரும்பாலான இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடங்கள் செய்திகளை வெளியிடாதவாறு முடக்கப்பட்டன. அரச ஊடகங்கள்  நாட்டில் பிரச்சினையே இல்லையென்றமாதிரியான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருந்தன.

இந்த நகரங்கள் முற்றுகையிடப்படு இருக்கும் போதே சிரியாவின் மிகப்பெரிய நகரான அலெப்போவில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன‌.  இந்த நகரமும் சுன்னிகளை பெரும்பான்மையாக கொண்ட நகரமே. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தவிரும்பிய அசாத்  தனது அரசு ஊடகங்களை  பாவித்து சுன்னி முஸ்லிம்களே பிரச்சினையை ஏற்படுத்த முனைவதாக பிரச்சாரங்கள் முடக்கிவிட்டார். ஆர்ப்பாட்டகாரர்களை பயங்கரவாதிகள் என்றார்இதுவொரு சர்வதேச சதி என்றார். தனது ஆட்சியை விரும்பாத மற்றும் புரட்சிக்கு ஆதரவான சியாக்களும், கிரிஸ்தவர்களும் மீண்டும் தன்பக்கம் வருவதற்கு இந்த உத்தி ஓரளவு உதவினாலும்,  இதுவே மிகப்பெரிய பிழையாகவும் மாறியது. ஏனெனில் ஈராக்கிய ஆக்கிரமிப்புக்கு பின்னர் அமெரிக்கர்கள் தமக்கு எதிரான ஈராக்கியர்களின் ஒற்றுமையான போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் தமது வழமையான பிரித்தாளும் (Divide and rule) தந்திரத்தை பாவித்து  சுன்னி-சியா என்ற வகுப்புவாத பிரிவினையை தூண்டிவிட்டதும், அது கூர்ப்படைந்து இன்றைய ஈராக்கின் போரழிவுக்கு காரணமாக இருக்கின்றது என்ற தெரிந்தும் அதிலிருந்து படிப்பினை பெறாமல் சிரியாவிலும் அதே ஆயுதத்தையே அசாத் தூக்கியது அவரின் முட்டாள்தனமே அன்றி வேறில்லை.

(தொடரும்)